சென்னை: தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ள என்று கூறிய, அவரது நியமன உத்தரவை  ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனராகப் பதவி வகித்த சாருமதி என்பவர் கடந்த ஆண்டு (2019) 9 மே 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.  அதையடுத்து அந்த பதவிக்கு  பூர்ணசந்திரனை தமிழக அரசு  நியமித்து, கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 14- ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், இதில் விதிமீறல் உள்ளதாகவும், தமிழகஅரசின்   அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில்,  கல்லூரிக் கல்வி இயக்குனராக உள்ளவர், பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன், அப்பதவிக்கான தகுதியானவர்கள் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். ஆனால், பூர்ணசந்திரனை அப்பதவியில் நியமிப்பதற்காக, காலதாமதமாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்ணசந்திரனை விட சீனியரான தன்னை, கல்லூரிக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும். அவரை நியமித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். நேற்றைய விசாரணையயைத் தொடர்ந்து, பூர்ணசந்திரனை கல்லூரிக் கல்வி இயக்குனராக நியமித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி,  கல்லூரிக் கல்வி இயக்குனராக பூர்ணசந்திரனை நியமித்ததில் விதிமீறல்கள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக அறிவித்து, அவரது நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், கல்லூரிக் கல்வி இயக்குனரைத் தேர்வு செய்வதற்கு விதிகளைப் பின்பற்றி, மீண்டும் நடைமுறைகளை மேற்கொண்டு, மூன்று மாதங்களில் முடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.