சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்களப் பணியாளர்கள் ஆர்வம் காட்டாத நிலையில், தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்; தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட முன்களப்பணியாளர்களுக்கு  செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 1,85,299 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில், 10,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவர்களில், 7,436 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 1480 பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.

தடுப்பூசி தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தான்  தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும்,  அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்கள பணியாளர்கள் தவிர்க்க வேண்டாம், “இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மூலம் அது உறுதிசெய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு வந்திருக்கக்கூடிய இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இங்கு அனைவருக்கும் தடுப்பூசி என்பது கட்டாயம் தேவை. எனவே, இதில் பாதுகாப்பு என்பது நூறு சதவீதம் உள்ளது.
தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளையும், தடுப்பூசி போடும் பணிகளையும் மருத்துவர்களும், செவிலியர்களும் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நாடு முழுவதும் இதுவரை 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் வேறும் ஒரு லட்சத்து 85  ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.