கடலூர்: கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று, மாவட்டத்தில்  ரூ.57.7 கோடியிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார். இன்று கடலூர் வந்த முதல்வர் அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் நிறைவுற்ற ரூ.25.54 கோடியிலான புதிய திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.32.16 கோடியிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்தியாவிலேயே அதிக பரிசோதனை தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.  நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்டறியப்படுகிறது . மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்களும் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர் என்றும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர்,  கட​லூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.495 கோடியில் கதவணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளன என்றார்.
கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியவர்,  கட​லூர் மாவட்டத்தில் 12,514 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, 1,554 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன,  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.225 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக ரீதியிலான  கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும், இதனால் மாவட்டம் மேலும் வளர்ச்சிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, அம்மாவட்ட நிர்வாகத்தினருடனும் சுகாதாரத்துறையினருட னும் ஆலோசனை நடத்தினார்.