சேலம்:
திரைத்துறையில் இருந்திருக்க வேண்டியவர் சேலம் கலெக்டர் ரோகிணி என தமிழக இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம் கலெக்டர் ரோகிணி திருநெல்வேலி மாவட்டத்தில் சப் கலெக்டராக இருந்தபோதே இரவு நேரத்தில் ஆறுகளில் திருட்டுத்தனமாக மண் அள்ளுபவர்களை தடுத்து, கெத்து காட்டியவர். இவர் சேலம் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கி வருகிறார். மக்களுக்கு தேவையான வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதா என பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன் காரணமாக அவருக்கு மக்கள் மனதில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் ரோகிணி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், சேலத்தாம்பட்டி ஏரிக்குள் வீட்டு வசதி வாரியத்தின்மூலம் வீடு கட்டி வருகிறார்கள். இதுகுறித்து கலெக்டர் ரோஹிணியிடம் கேட்டால், அது குளம் அல்ல ஏரியா என்று நக்கலாகப் பதில் சொல்லுகிறார். ஐஏஎஸ் அதிகாரிகளை விமர்சனம் செய்யக் கூடாது. ஆனால், சேலம் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, அவர் திரைப்படத் துறையிலும், சின்னத் திரையிலும் இருக்க வேண்டியவரோ எனறு நினைக்கத் தோன்றுகிறது’ விமர்சித்தார்.
மேலும், தற்போது நடைபெற்று தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ”நல்ல திட்டங்கள் இருக்குஎதிர்பார்த்தால்… ஏமாற்றம்தான் மிஞ்சி உள்ளது. அமைச்சர்களின் பதில்கள் திருப்தியாக இல்லை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. அவர்களின் பயிர்க்கடன், கல்விக்கடன், மகளிர் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும். இதுகுறித்து சட்ட சபையில் எந்தவித அறிவிப்பும் இல்லை. முதல்வர் எந்தப் பதிலும் சொல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது.
தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு தராமல் தமிழகத்தைப் புறக்கணிப்பதோடு வஞ்சிக்கிறது. கஜா புயல் பாதித்த பகுதிகளை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள், தமிழக அரசு சொல்லியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றும் கூறினார். மேலும், 2019-ம் ஆண்டு, மோடியின் ஆட்சிக்கு விடைகொடுக்கும் ஆண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.