மும்பை: பாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு மகாராஷ்ரா மாநிலத்தின் புல்லட் ரயில் திட்ட டெண்டர்கள் கிடைத்திருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலமைச்சராக பதவியேற்றதுமே, மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே அறிவித்தார். இந்திய, ஜப்பான் கூட்டு திட்டமான இதற்கான ஒப்பந்த புள்ளிகளை பெற போட்டா போட்டி நடந்திருக்கிறது.

அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பாஜகவுக்கு அதிகளவு கட்சி நிதி தந்த நிறுவனங்களுக்கு 3 ஒப்பந்த புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, வதோதரா நிலையத்தில் கணினி முன்பதிவு மையத்துக்கான ஒப்பந்தம் ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த நிறுவனம் குஜராத்தை மையமாக கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனம் 3 தவணைகளாக 55 லட்சம் பாஜகவுக்கு கொடுத்திருக்கிறது. அதன் நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைத்துள்ள தகவல்கள் படி, கடந்த காலங்களில் பல திட்டங்களை பெற்று முடித்து கொடுத்திருக்கிறது.

அவற்றில் ஒரு திட்டம் பிரதமர் மோடி கையால் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு திட்டம் அமித் ஷாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது.

மற்ற 2 கம்பெனிகள், மும்பை அகமதாபாத் அதிவேக ரயில்வே புராஜெட்டை பெற்றிருக்கிறது. சவானி, தான்ஜி என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் முறையே ரூ.2, ரூ.2.5 லட்சத்தை பாஜகவுக்கு நிதியாக அளித்திருக்கின்றன.