அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டியுள்ள போட்டி சட்டமன்றம்

சென்னை:

திமுக அரசுக்கு எதிராக திமுக தலைமையகமான அண்ண அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் கூட்டப்படும்  என்று நேற்று ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து இன்று போட்டி சட்டமன்ற கூட்டம் தொடங்கியது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தி மாதிரி சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது.

நேற்று தொடங்கிய தமிழக சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக சபையில் அமளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டியுள்ள போட்டி சட்டமன்றம்

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பதவி விலகும் வரை சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும்,  திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில் நாளை (இன்று) போட்டி சட்டமன்றம் நடத்த விருபப்தாகவும் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்,  திமுக சார்பில் நடத்தப்பட உள்ள மாதிரி சட்டசபைக்கான அரங்கம் தயார் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்த இன்று காலை அங்கு போட்டி சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில்  திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம் எல் ஏ.,க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கருணாஸும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். திமுக சட்டசபைக் கொறடா சக்ராபாணி இந்த மாதிரி சட்டசபைக்கான சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கிறார்.

கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.