சென்னை,

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விஷால் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  போட்டியிட போவதாக அறிவித்து நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். அவரது செயலுக்கு திரையுலகில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பிரிவினர் இயக்குனர் சேரன் தலைமையில், விஷால் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில்,  சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும், நடிகர் சங்க தேர்தலிலும் பணம் கொடுத்து விஷால் வெற்றி பெற்றதாக பேஸ்புக்கில் தகவல் வெளியாகி யுள்ளது. இந்த தகவல்களை அலட்சியமாக கருதாமல் விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.