மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பங்களிக்கும் இந்திய கால்பந்து சங்கம் மற்றும் வீரர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது ஆசிய கால்பந்து கூட்டமைப்பு.

பிரதமர் நிவாரண நிதிக்கு, கால்பந்து சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. இந்திய கால்பந்து வீரர் வினீத், கண்ணூரின் கேரள அரசு உதவி மையத்தில், தன்னார்வ தொண்டராக தனது சேவையை வழங்கி வருகிறார்.

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர், மருத்துவமனை ஒன்றுக்கு ரத்த தானம் வழங்கினார்.
பிரீதம், பிரனாய், அரிந்தம் மற்றும் தாஸ் உள்ளிட்ட பல இந்தியக் கால்பந்து வீரர்கள் இணைந்து, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.1.45 லட்சம் நிதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களோடு ஒப்பிடுகையில், இந்தியக் கால்பந்து வீரர்கள் பெறுகின்ற சம்பளம், ஊக்கம், முக்கியத்துவம் மற்றும் உதவிகள் மிகவும் சொற்பமானவையே என்பது குறிப்பிடத்தக்கது.