ராமர் கோயில் பூமி பூஜை அன்று மே. வங்கத்தில் முழு ஊரடங்கு..

மே. வங்காள மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் முழு ஊரடங்கு கடை பிடிக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டது.

பக்ரீத் பண்டிகை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ( 2 ஆம் தேதி) அன்று ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலாக வரும் 5 ஆம் தேதி முழு ஊரடங்கை கடை பிடிக்க அரசு ஆணையிட்டுள்ளது.

ஆனால் அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுவதால், இந்த ஊரடங்கை சர்ச்சையாக்கியுள்ளது, பா.ஜ.க.

‘’பூமி பூஜை நடக்கும் நாளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பது, ஆளும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்துக்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது’’ என பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

இதே கருத்தை பிரதிபலித்துள்ள மே.வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ் ’’இந்திய நாட்டின் சரித்திர நிகழ்வுகளில் ஒன்று, ராமர் கோயில் பூமி பூஜையாகும். பூமி பூஜை நடக்கும் தேதியில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளதை ஏற்க முடியாது.இந்த ஆணையை வாபஸ் பெற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்..

‘’ இந்த ஆணையை வாபஸ் பெற மறுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் ‘’ என்று அவர் மம்தா பானர்ஜி அரசை எச்சரித்துள்ளார்.

-பா.பாரதி.