மும்பை: மகேந்திரசிங் தோனி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவருக்காக முறைப்படி ஒரு பாராட்டு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத நேரத்தில், அமைதியான மு‍றையில் திடீரென ஓய்வை அறிவித்துவிட்டார் தோனி. அதிக ரசிகர்கள் மற்றும் புகழைப் பெற்றிருக்கும் தோனி, இப்படி செய்திருக்கக்கூடாது என்று மிஸ்பா உல் ஹக் மற்றும் சோயப் அக்தர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தோனிக்கான பிரியாவிடை நிகழ்வு குறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், “தோனிக்கு பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். யாரும் அவர் ஓய்வு பெறுவார் என்று நினைக்காத நேரத்தில் அவர் ஓய்வை அறிவித்து விட்டார். இப்போதைக்கு, சர்வதேச ஆட்டம் எதுவும் இந்திய அணிக்கு இல்லை.

எனவே, ஐபிஎல் போட்டியின்போது அவரிடம் இதுபற்றி பேசி முடிவெடுக்க வேண்டும். அணிக்காக மற்றும் நாட்டுக்காக ஏகப்பட்ட பங்களிப்பு செய்துள்ளார் தோனி. அதற்குரிய மரியாதை அளிக்கப்படும். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சரி, முறைப்படி ஒரு பாராட்டு பிரியாவிட நிகழ்ச்சி நடத்தப்படும். அவருக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.