திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான ஜே.கே.ரித்தீஷ்(46) 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கையில் :-

”நடிகரும், முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் ( எ ) சிவகுமார் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலிலும், திரைத்துறையில் நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர்.

ஜே.கே.ரித்தீஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.

அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்”.என தெரிவித்துள்ளது.