டெல்லி:
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தள்ளி வைக்கப்பட்ட 10வது மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நெறிமுறைகள்படி நடத்திக் கொள்ளலாம் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கி உள்ளார்.
இதுகுறித்து  உள்துறை செயலாளர்  அஜய்பல்லா அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு 4வது கட்டமாக மே 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஜூன் 1ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக உள்பட அரசியல் கட்சிகள், கல்வியலாளர்கள் வேண்டுகோளின் படி, தற்போது 10ம்வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ந்தேதி தொடங்கும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.
அதில்,  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில்  மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத்திட்டங்களில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நடத்த முடியாமல் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி கேட்டு மாநில அரசுகள் மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு ஊரடங்கு காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்திக் கொள்ள தளர்வு அறிவிக்கப்படுகிறது.
அதே சமயம், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் கட்டாயம் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.