டில்லி:

நாட்டில் ஊழக்கு எதிரான லோக் ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், லோக்பால் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காததால் லோக்பால் தலைவர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த இன்றைய வழக்கில் ஆஜரான  மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால்,  லோக்பால் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்  வகையில்  கொண்டு வரப்பட்டது லோக்பால் மசோதா. இந்த சட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது.

ஊழலை ஒழிக்க வகை செய்யும் சட்டம் லோக்பால் சட்டம். இந்த சட்டத்தை மத்திய பாரதியஜனதா அரசு தாமதப்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், லோக்பால் குழுவை அமைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, லோக் ஆயுக்தா  சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், சட்டத்தின்படி  இயங்கக் கூடிய ஒரு பகுதியே லோக்பால் சட்டம். லோக் ஆயுக்தா, லோக்பால் நியமனங்களை தாமதப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதி மன்றம், லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

லோக்பால், லோக் ஆயுக்த பதவிகளை உருவாக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் அதை ஏன் அமலுக்குக் கொண்டுவரவில்லை?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், கடந்த 1ந்தேதி லோக்பால் தேர்வு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன் கார்கே  மறுத்துவிட்டார்.

”இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக என்னை அழைக்கவில்லை.   ஒரு சம்பிரதாயத்துக்காக மட்டுமே அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற உச்சநீதி மன்ற விசாரணையின்போது,   லோக்பால் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால் கூறினார்.