டில்லி,
காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரான மீராகுமாரின் பயோ டேட்டா இதோ.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மீரா குமார், அங்குள்ள அர்ரா மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி பிறந்தார்.
இவர், மறைந்த முன்னாள் துணைபிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் மகள் என்பது சிறப்பு.
இவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டமும், எல்.எல்.பி. என்ற சட்டப்படிப்பையும் முடித்தவர்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். குறிப்பாக 1973-ம் ஆண்டு, இந்திய வெளியுறவு பணி (ஐ.எப்.எஸ்.) அதிகாரியாக பதவியேற்றார்.
பின்னர், ஸ்பெயின், இங்கிலாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் தூதரக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
பின்னர் ஏற்கனவே சட்டப்படி முடித்திருந்ததால், 1980-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசனில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, மீராகுமாரின் சுறுசுறுப்பு மற்றும் திறமையை அறிந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்ற அழைத்தார். அதையடுத்து, தனது வெளியுறவு அதிகாரி பதவியை உதறிவிட்டு, அரசியலில் கால் பதித்தார்.
1985ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மீராகுமாருக்கு உ.பி. பிஜ்னோ பாராளுமன்ற தொகுதியில், இவரை எதிர்த்து போட்டியிட்ட மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்.
இதைத்தொடர்ந்து மீராகுமார் முதன்முதலாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மீராகுமார், 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை பாராளுமன்ற சபாநாயகராக பணியாற்றினார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஆகிய கட்சி பதவிகளை வகித்துள்ளார்.
இடயில் 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரை, காங்கிரசை விட்டு விலகி இருந்தார்.
மீரா குமாரின் கணவர் மஞ்ஜுல் குமார், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ஆவார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
மீரா குமாருக்கு கர்நாடக சங்கீதத்திலும், புத்தகம் வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு.
தற்போது காங்கிரஸ், திமுக உள்பட 17 கட்சிகளின் சார்பாக பாரதியஜனதா வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் களத்தில் குதித்துள்ளார்.