ஜெய்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேரம் பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அவர் உட்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா என்பவரிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா பேசியதாவது: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா, விஸ்வேந்தர சிங் ஆகியோரை காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசை கவிழ்க்கும் சதியில் இறங்கிய  மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் வழங்க அவருக்கு கருப்பு பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.