நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி  இன்னும்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கும் மே மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.

தேர்தல் தேதி முடிவாகா விட்டாலும்  உத்தரபிரதேசத்தில் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.குறிப்பாக சோனியாவின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் அனல் பறக்கிறது பிரச்சாரம்.

அமேதி தொகுதி- காங்கிரஸ் கோட்டை.

கடந்த 2004 –ஆம் ஆண்டு முதல் ராகுல் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார்.2004 –ஆம் ஆண்டு தேர்தலில் ராகுல்,தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சி..பி..மிஸ்ராவை 2 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்..

அடுத்து நடந்த  2009 –தேர்தலில் ராகுல் –பகுஜன் சமாஜ் வேட்பாளர் அஷீஷ் சுக்லாவை 3 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

கடந்த 2014 –ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்திலேயே அவர் வெல்ல முடிந்தது..காரணம் –மோடி அலை.அந்த தேர்தலில் உ.பி.மாநிலத்தில் அமேதி தவிர ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. ரேபரேலி வேட்பாளர் –சோனியா.

கடந்த தேர்தலில் அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டவர்.ஸ்மிருதி ராணி. அவர் 3 லட்சம் ஓட்டுகளை பெற ,ராகுல் 4 லட்சத்து 8 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.

இந்த முறை ராகுல்காந்தியை அமேதி தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து மக்களவைக்கு அனுப்புவோம் என்கிறார்-உ.பி.காங்கிரஸ் எம்.எ.ல்.சி..தீபக் சிங்.

ஓய்ந்து விட்ட மோடி அலை, பொதுச்செயலாளராக பிரியங்காவின் பிரவேசம்,பிரதமர் வேட்பாளராக ராகுல் களம் காணுதல் போன்ற சாதகங்கள் இருப்பதால் –இந்த வாக்கு வித்தியாசம் உறுதி என்கிறார்கள் உ.பி.காங்கிரசார்..

இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் சிந்திவாரா தொகுதியிலும் ராகுல் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அந்த தொகுதியில் –ம.பி.மாநில தற்போதைய முதல்வர் கமல்நாத் 8 முறை போட்டியிட்டு ஜெயித்துள்ளார்..

— பாப்பாங்குளம் பாரதி