டில்லி
எல்லை பிரச்சினைக்காக உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
லடாக் எல்லையில் முகாமிட்டிருந்த சீனப்படைகள் திரும்பச் செல்ல ஒப்புக் கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 15 ஆம் தேதி அன்று எல்லையில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த மோதல் சீனப்படைகள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் போது நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது சீனப்படைகள் இன்னும் அங்கேயே முகாம் இட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைப் போல் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இவற்றை அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம், “தற்போது லடாக் எல்லையில் முக்கியமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட வேண்டும். இதுவரை பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப் பாராளுமன்ற குழுக்கூட்டம் கூட கூட்டப்படாமல் உள்ளது,.
நாடாளுமன்றம் என்பது முக்கிய விவகாரங்கள் குறித்து அனைவரும் விவாதம் நடத்தக்கூடிய ஒரே இடம் ஆகும். அங்கு மட்டுமே அனைத்துக் கட்சியினரும் கேள்விகள் எழுப்பி அதன் மூலம் நடப்பு விவகாரத்தைத் தெரிந்துக் கொள்ள முடியும். நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது மூல பல முக்கிய விவகாரங்களுக்கு ஒரு முடிவு காண முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.