டில்லி

வேளாண் சட்டச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் மனுதாரரில் ஒருவரே இடம் பெற்றுள்ளதற்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 50 நாட்களாக பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து வ்விவசாயிகள்  டில்லியில் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அரசிடம் அவர்கள் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளது.  இந்த போராட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் ஒரு குழு ஒன்றை  அமைத்ததுடன் உச்சநீதிமன்றம் சட்டங்களை அமலாக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தக் குழுவில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி ஆகியோர் இடம்  பெற்றுள்ளனர்.  இவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என கருதப்படுபவர்கள் ஆவார்கள்

இந்தக் குழு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, “உச்ச நீதிமன்றம்  அமைத்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் நம்பகத்தன்மை குறித்து அரசின் வழக்கறிஞர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் வெளியிட முடியுமா.வரும் 15-ம் தேதி நடக்கும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றுப் பேச வேண்டும்.

இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் யார் அளித்தது எனத் தெரியவில்லை. உறுப்பினர்களின் பின்புலம் ஏன் ஆய்வு செய்யப்படவில்லை,? உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து ஏன் ஆய்வு செய்யப்படவில்லை. குழுவின் அனைத்து உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவானவர்கள் என்பதால். எவ்வாறு இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்?

முக்கியமாக குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர்தான் மனுதாரராக இருக்கிறார். மனுதாரர் ஒருவரை எவ்வாறு குழுவில் நியமிக்க முடியும். இந்த 4 உறுப்பினர்களுமே வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானர்கள்.  எனவே இந்த குழு அமைக்கப்பட்டது குறித்து சுய ஆய்வு செய்ய வேண்டும். இந்த குழுவிடம் இருந்து விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது.

டில்லி எல்லையில் தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகள் கடந்த 49 நாட்களாகப் போராடி வருகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் போராடி வருகிறார்கள், , மோடி அரசு அகங்காரத்துடன் அதைக் கவனிக்கவில்லை.

ஆனால் உச்சநீதிமன்றம் விவசாயிகளின் துயரம், மனவேதனை, வாழ்வுக்கான கண்ணீர், வாழ்வாதாரம் ஆகியவை குறித்துக்  கவனித்துள்ளது. இவை அனைத்தும் சில முதலாளிகளுக்காக மோடி அரசால் நிர்மூலமாக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே உண்மையின் கண்ணாடியை அரசுக்குக் காண்பித்துள்ளார்.

பாஜக அரசு வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற வேண்டும், இவை மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. நாட்டில் நுகர்வோருக்கு ஆதரவு இருக்கும் தேசத்தின் தூண்களான உணவுப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதார விலை, உணவு பகிர்மான முறை, கொள்முதல் ஆகியவற்றை இந்தச் சட்டங்கள் சிதைத்துவிடும்” என தெரிவித்துள்ளார்.