கொச்சி: 
காங்கிரஸ் கட்சி எப்போதும் மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து “தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான நிகழ்வு’ என்று ராமர் கோவிலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து சிபிஎம் ஏற்கெனவே தனது நிலைப்பாட்டைத் தெளிவாக கூறிவிட்டது. நான் மீண்டும் அதைச் சொல்ல வேண்டியதில்லை.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கருத்து தனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. இதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டாம் என தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சி எப்போதும் எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் முதல் இப்போது வரையில் காங்கிரஸ் வரலாறு இதுதான் என தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி உண்மையான மதச்சார்பற்ற கொள்கையில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. காங்கிரஸ் எப்போதுமே மென்மையான இந்துத்துவப் போக்கை கடைபிடித்து வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமைதியாக இருந்தது யார்? அப்போது காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்தது யார்? என அடுக்கடுக்கான் கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.