டெல்லி: காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்விக்கு காய்ச்சல் போன்ற லேசான அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

அதன் முடிவில் சிங்விக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது மனைவிக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இருவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசாங்க வழிகாட்டுதல்களின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். சிங்வியை தொடர்ந்து அவரது மகன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த வைரஸுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளனர்.

முன்னதாக கோவிட் பரிசோதனையில் கொரோனா தொற்று, காங்கிரஸ் முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜாவுக்கு உறுதியானது. அவருக்கு பிறகு கொரோனா தொற்று பாதிக்கும் 2வது காங்கிரஸ் தலைவர் சிங்வி ஆவார்.