டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உறவினரும், முன்னாள் எம்பியுமான கருணா சுக்லா கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 70.

 

காங்கிரஸ் தலைவரும், 14வது மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர் கருணா சுக்லா. அவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த கருணா சுக்லா, நேற்றிரவு பலியானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த கருணா சுக்லா முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர்.

கடந்த 2013ம் ஆண்டு பாஜகவிலிருந்து வெளியேறிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட கருணா, பாஜகவின் லகான் லால் சாஹுவால் தோற்கடிக்கப்பட்டார். கருணா சுக்லா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.