ராஜபாளையம்

ல நாடுகளின் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வெற்றிகரமாக நடந்து வருகிறது.  அமெரிக்க வருங்கால அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சௌதி பட்டத்து இளவரசர் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

ராஜபாளையத்தில் உள்ள கே தொம்பக்குளம் பகுதியில் நடைபெறும் 100 நாள் கட்டாய வேலைத் திட்டப் பணிகளைக் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது அவர், “சமீபத்தில் பெய்த தொடர் மழையால் சேதம் அடைந்துள்ள பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்குக் குறைந்தது ரூ.,30000 மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

பல உலக நாடுகளின் தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க தாங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  ஆனால் இதுவரை நமது பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.  விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்துள்ள கொரோனா தடுப்பூசிக்காக அவர்களுக்குப்  பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.