சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்பி வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இருவருக்கும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்த குமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இன்றைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை அவரது மகன் விஜய் வசந்த் உறுதிபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் கணவரும், மருத்துவருமான சவுந்தரராஜன் சென்னையில் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்துக் கேட்டறிந்து, உடனிருந்து வருகிறார். வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டுவதாக தமது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். சஞ்சய் தத் கூறி இருப்பதாவது: சில நிமிடங்கள் முன் தான் வசந்தகுமார் மகன் விஜய் வசந்திடம் பேசினேன். மருத்துவமனை நிர்வாகம் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று சொன்னார்.

செயல் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல் நலம் தேற, சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அவருக்குத் திடமான உடல் நலனை அளித்து, நோயை எதிர்த்துப் போராடி விரைவில் உடல் நலன் தேற அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.