டெல்லி: வரும் 8ம் தேதி காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கிறது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களிலும் விடுமுறை இல்லாமல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலியாக எம்.பி.க்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  இரு அவைகளையும் தலா 4 மணி நேரம் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு இருக்கைக்கு இடையே உரிய இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இரு அவைகளும் காலை, மாலை என தனித்தனியாக நடத்தப்படுகிறது. ராஜ்யசபா காலையிலும், லோக்சபா மாலை நேரத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், எம்.பிக்கள் கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து இருக்கிறது. கூட்டத்தொடரில்  எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.