மும்பை:

காங்கிரசில் கட்சியில்இருந்து விலகிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, இன்று உத்தவ் தாக்கரே முன்னிலையில்,  சிவசேனா கட்சியில் இணைந்தார்.

பிரியங்கா சதுர்வேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இவர், திடீரென  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், உடனே  சிவசேனா கட்சியுடன் கைகோர்த்து உள்ளார்.

பிரியங்கா சதுர்வேதி  ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார். மதுராவில் நடைபெற்ற   கூட்டத்தில் கலந்துகொண்டபோது, அவரிடம் சில காங்கிரஸ் நிர்வாகிகள் தவறாக நடக்க முயற்சித்தாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, தவறாக நடக்க முயற்சித்தவர்கள்மீது  நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் தலைமை, தற்போது தேர்தலுக்காக அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது.

இதனால் அதிப்தி அடைந்த  பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.  தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி உள்ளார்.

அதைத்தொடர்ந்து, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்ராவ் தாக்கரேயை சந்தித்த பிரியங்கா சதுர்வேதி,  சிவசேனா கட்சி தலைமையகத்தில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.