வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து சர்வே எடுக்கும் காங்கிரஸ்..

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஆனால் போட்டியிட்ட 41 தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது.

தொகுதிப் பங்கீட்டில்  கடைசி நேரத்தில் நடந்த இழுபறியே , இதற்குக் காரணம் .

ஆனால் இன்னும் 6 மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் காங்கிரஸ், தனக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து சர்வே நடத்தி வருகிறது.

’’இதுவரை 22 தொகுதிகளில் சர்வே நடந்து முடிந்துள்ளது. எஞ்சிய தொகுதிகளில் இன்னும் 3 மாதத்தில் சர்வே முடிந்து விடும்’’ எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

 ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அரசியல் அடிப்படையில் ஓட்டுப்போடுகிறார்களா?  அல்லது ஜாதி மற்றும் மதம் பார்த்து வாக்களிக்கிறார்களா? என்பன போன்ற  விவரங்களை உள்ளடக்கிய ‘’டேட்டா’’ தொகுப்பை  வைத்து , தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் பற்றி  காங்கிரஸ் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

-பா.பாரதி.