ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், , முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட ஏராளமானோர் முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தொலைத்தொடர்பு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. 2 மாதங்களை கடந்த பிறகு, தற்போது அங்கு படிப்படியாக இயல்புநிலை திரும்பி உளளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கான தேர்தல் அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவில் உள்ளாட்சி நிர்வாகத்தை செய்வதில் இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. வேறு சில கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆனால் இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, மாநில காங்கிரஸ் தலைவர் மீர்,  ‘‘தற்போதைய சூழலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறும் தேர்தலில் பங்கேற்பது சரியான முடிவாக இருக்காது. எங்கள் கட்சித் தலைவர்கள் பலரும் சிறையில் உள்ளனர். தொண்டர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தேர்தலில் பங்கு கொள்வது சரியான முடிவாக இருக்காது’’ என தெரிவித்துள்ளார்.