கடந்த ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநில கட்சி விவகாரங்களை கவனித்து வருகிறார்.

அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கிராமங்களில் கட்சியின் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு சார்பில் பிரியங்கா காந்தி புகைப்படங்களுடன் கூடிய 10 லட்சம் காலண்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவை உ.பி. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையும் வகையில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உ.பி.யில். பிரியங்கா பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகள், போட்டோக்களுடன் அந்த காலண்டரில் இடம் பெற்றுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் தாக்குதலுக்கு ஆளான சிறுமியின் கண்ணீரை பிரியங்கா துடைக்கும் போட்டோ, பலரையும் ஈர்த்துள்ளது.

லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பிரியங்கா கலந்து கொண்ட புகைப்படங்கள் விளக்க குறிப்புகளுடன் காலண்டரில் இடம் பெற்றுள்ளது.

– பா. பாரதி