டெல்லி: பகத் சிங்,ராஜகுரு, சுக்தேவ் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான மணீஷ் திவாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடி ஒரு தலைமுறையை கவர்ந்த, முன்மாதிரியாக இருந்தவர்கள் விடுதலை போராட்ட வீரர்கள் ஷாஹீத் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர். 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி  இன்னுயிரையும் தந்துள்ளனர்.

2020ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அவர்கள் 3 பேருக்கும் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டால், 124 கோடி இந்தியர்களின் மனம் மற்றும் ஆன்மா மகிழும். சண்டிகர் விமான நிலையத்திற்கு ஷாஹீத் இ அசம் பகத் சிங் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்று எழுதி இருக்கிறார்.

முன்னதாக, மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையின் போது, பாஜக சில வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.