சென்னை,

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாததால், நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளரை கோர்ட்டில் ஆஜராக ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, இன்று தலைமை செயலாளர் கிரிஜா கோர்ட்டில் ஆஜரானார்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு 2013 -ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை 3 மாதத்திற்குள் அமல்படுத்துவதாக கடந்த அக்டோபரில் தமிழக அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், , நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்துமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கண்டனம் தெரிவித்தது. மேலும், அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்குகள் வெள்ளம் போல் திரண்டு கிடப்பது தலைமை செயலாளருக்கு தெரியுமா என கேள்வி எழுப்பியது.

மேலும், இந்த வழக்கில், தலைமைசெயலாளர், வீட்டு வசதித்துறை செயலாளர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 பேர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆஜராகினர்.

அப்போது, கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவுகளை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.