சென்னை,

லகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்வது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாகவே வழக்கு பதிவு செய்துள்ளது.

தற்கொலையை தூண்டும் புளுவேல் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டிலும் இந்த விளையாட்டு காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது.

இந்த விளையாட்டை தடை செய்வது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

மேலும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதேபோல சிபிஎஸ்இ கல்வி வாரியமும் மாணவர்கள் கணினி பயன்படுத்துவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புளுவேல் மரணம் குறித்து,  சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.