சென்னை:

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தனது  கருத்துக்கு மன்னிப்பு கோரி உள்ளார்.

கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து தான் பார்வேடு செய்த கருத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ் வி சேகர் அனுப்பியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இது செய்தியாளர்களிடையே பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இன்று பிற்பகல் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும், எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கமும் அறிவித்திருந்தன.

இந்நிலையில், தனது பதிவுக்கு மன்னிப்பு கோரி எஸ்.வி.சேகர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில்,  முகநூலில் எனது நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விட்டேன். சற்று நேரத்தில் என் நண்பர் அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னார். உடனடியாக அது நீக்கப்பட்டும் விட்டது.

அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக் கூடிய எதையும் நான் ஆதரிக்க வில்லை  என்றும், அனைத்து  பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும் குடும்பத்திலிருந்து வருபவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயம் நான் நீக்கிவிட்ட பதிவை பத்திரிகை சகோதரிகளுக்கு மனவருத்தம் ஏற்படுத்திய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இப்போதும் தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.