பரிமலை

ற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் சபரிமலைக்குச் செல்ல 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதி குறித்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு  முந்தைய தீர்பான இளம் பெண்கள் செல்ல தடை இல்லை என்று தீர்ப்புக்குத் தடை வழங்கவில்லை.   இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.  கேரள அரசு, ‘‘இளம் பெண்கள் சபரிமலை செல்ல விரும்பினால் செல்லலாம். ஆனால் அவர்களுக்குத் தனியாக எந்த  பாதுகாப்பும் அளிக்கப்படாது’’ என்று தெரிவித்தது. தற்போது சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 23 ஆயிரம் காவல்துறையினர் மொத்தம் 5 கட்டமாக அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன் இளம் பெண்கள் வருகிறார்களா  என்பதைக் கண்காணிக்க தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் சபரிமலைக்கு வந்த 10 இளம் பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

நேற்று நிலக்கல் பகுதியில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து வந்த  குழுவினர் வந்த பேருந்தைச் சோதனையிட்டனர். அதில் பயணித்த தனலட்சுமி என்ற பெண் 30 வயது உடையவர் என்பதும், லட்சுமி பார்வதி என்பவர் 40 வயது உடையவர் என்பதும் தெரியவந்தது. அந்த  இரு பெண்களையும் காவல்துறையினர்  நிலக்கலில் தடுத்து நிறுத்தினர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக இதுவரை 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் ஆன்லைனில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச்  சேர்ந்தவர்கள் இல்லை என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பதிவு செய்தவர்களில் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் இரண்டாம் இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும் கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.  கேரள சட்டத்துறை அமைச்சர் ஏகே பாலன் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்கள் தங்குமிடம் குறித்து உச்ச நீதிமன்றம் சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை எனத் தெரிவித்தது மேலும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.