டில்லி:
ரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம்  ஆதார் எண்ணை அளிக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு  அறிவித்துள்ளது.
பொதுமக்களின் வீட்டு பயன்பாட்டுக்கு, மத்திய அரசு மானிய விலையில்  சமையல் எரிவாயு வழங்கி வருகிறது. ஆனால், சமையல் எரிவாயு வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதை  அடுத்து, அதை முறைப்படுத்த மத்திய அரசு  திட்டமிட்டது.
அதன் அடிப்படையில், சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ( 2015ம்) ஆண்டு  ஜனவரி மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, முதலில் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சந்தை விலைக்கே வழங்கப்படும். பிறகு அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக, தங்களது காஸ் ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே அளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு கூறியது.
இந்த நிலையில், கடந்த வாரம் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “ செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண்ணை அளிப்பவர்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு மானியம் வழங்க வேண்டும்.  ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் தராதவர்களுக்கு இந்த மாதம் (ஜூலை) முதல் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் அவர்கள் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டால், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத் தொகையும் சேர்த்து வங்கிக் கணக்கில் பெறலாம்.  செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானியத்தொகை அளிக்கப்படாது.
எந்த மாதத்தில் அவர்கள் ஆதார் எண் கொடுக்கிறார்களோ, அதன் அடிப்படையிலேயே மானிய தொகை  அளிக்கப்படும்.
v
ஆதார் எண் கொடுத்தோர் விவரம்:
தமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில்  ஒரு கோடியே 55 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியம் பெறுகிறார்கள். இவர்களில், 60 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டனர்.  மற்றவர்கள்  இன்னும் ஆதார் எண்ணை அளிக்கவில்லை.