திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமுடன் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ள மாநிலங் களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள கேரளாவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாட்டின் 100 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமான கேரள மாநிலத்தில்தான் சமூக சீரழிவு களும் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு மோகங்களுக்கு ஆளான கேரளத்தவர்கள் ஆண்டு ஒன்றுக்கு, மாநிலத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தருவதாக மாநில அரசே மார்தட்டிக் கொள்கிறது. அதுபோல இந்தியாவில்  வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதில் கேரள மாநிலத்தவர்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.

தற்போது உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரபு நாடுகள் உள்பட பல நாடுகளில் பணி நிமித்தமாக தங்கியிருந்த கேரள மாநில மக்கள், கடந்த சில மாதங்களாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர்.

இவர்களில் பலர், தாங்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்ததை அரசுக்கு தெரிவிக்காத நிலையில், அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வந்தது தெரியவந்தது.

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமும் கேரளதான். இங்கு தொடர்ந்து வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் மட்டும்  மாநிலத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 19 பேர், கன்னுர் பகுதியில் 5 பேர், பந்தனம்திட்டம் பகுதியில் 2 பேர், எர்ணாகுளம் பகுதியில் 1, திருச்சூர் 1 ஆக மொத்தம் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இதுவரை 4 பேர் குணமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. காசர்கோடு மாவட்டம் முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இது கேரள மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.