சென்னை: கொரோனாவால் முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது.

தமிழகத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டோரில் தமிழகத்தில் 2,094 பேரும் மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. 17 நாட்களாக ஆயிரத்தை தாண்டியே இருந்த கொரோனா இன்று 2 ஆயிரத்தை கடந்து இருக்கிறது.

சென்னையில் மட்டும் 35,556 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 1,276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆகும். அவர்களில் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாக 576 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.