கேரளாவில் அநேகமாக எல்லாவற்றையும் மூடியாகி விட்டது.

கொரோனா பாதிப்பு நாளுக்குன் நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தியேட்டர்கள், மால்கள், ஓட்டல்கள், கல்வி நிறுவனங்கள் என சகலமும் ‘முழு அடைப்பு’ செய்ய-
ஊரே அடங்கி விட்டது. ஆனால் ‘குடிமகன்’ கள் மட்டும் ’அடங்கவில்லை’.

கூட்டம் கூடுவதை தடுக்கவே, அரசு கடை அடைப்பு செய்யச்சொல்லி ஆணையிட, மதுக்கடைகள் மட்டும் ரொம்ப பிஸி.
உடம்போடு உடம்பு நெருக்கமாக உரசிக்கொண்டு, கியூவில் நின்று சரக்கு வாங்கி செல்கிறது பெருங்கூட்டம்.
வழக்கமாக அந்த மாநிலத்தில் தினமும் 39 கோடி ரூபாய்க்கு மது வியாபாரம் நடக்குமாம்.

கொரோனா நோய் உள் புகுந்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில்- இந்த கடைகளில் இப்போது 41 கோடி ரூபாய் முதல் 42 கோடி ரூபாய் வரை தினமும் ’சரக்கு’ விற்பனையாகிறதாம்.

தமிழகத்தைபோல் கேரளாவிலும் மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது.

‘’ மதுக்கடைகளில் கியூவில் நிற்கும் போது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும்’’ என்று பலவேறு தரப்பினர் குரல் கொடுக்க-

அரசோ ’மூட முடியாது’’ என்று மறுத்து விட்டது.

‘’கட்டாயம் எங்கள் கடையில் மது வாங்க வேண்டும் என்று நாங்கள் யாரையும் நிர்ப்பந்தம் செய்யவில்லை. இஷ்டம் உள்ள கஸ்டமர்கள் வருகிறார்கள்.வாங்குகிறார்கள். எங்கள் பணியாளர்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடாக ‘மாஸ்க்’ அளித்துள்ளோம்’’ என்கிறார், கேரள அரசின் மதுபான கழக நிர்வாக இயக்குநர், ஸ்பர்ஷன் குமார்.

-லட்சுமி பிரியா