வாடிகன்: உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடான இத்தாலியை ஆட்டிப் படைக்கிறது.

கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டின் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ளதுடன், இதுவரை அந்த வைரஸ் தாக்குதலுக்கு 197 பேர் பலியாகிவிட்டதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இத்தாலிக்குள் குட்டி நாடாக இருக்கும் வாடிகனில் ஒருவருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், போப் ஆண்டவருக்கும் இருமல் ஏற்படவே, அவரையும் கொரோனா தாக்கியிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.