சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தமிழகஅரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138845 ஆக அதிகரித்து உள்ள நிலையில், சென்னை உள்பட பல மாநிலங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது.

குறிப்பாக சென்னை, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதாக தெரிவித்துள்ள இந்திய சுகாதாரத்துறை,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கிளல்  70 சதவிகிதம் பேர் இந்த குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பட்டியலிட்டு உள்ளது.
சென்னை உள்பட குறிப்பிட்ட 11 மாநகராட்சிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவது தொடர்பாக   மத்திய சுகாதார துறை செயலாளர் பிரீத்தி சுதன், அந்த  மாநகராட்சியின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி,  உயிர் இழப்புகளை குறைக்க வேண்டும் என  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க சென்னை உள்பட 11  மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தனி வார்டுகள் அமைப்பது, வென்டிலேட்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும் என  கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.