சென்னை:
சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு மக்களிடையே பதற்றத்தை தோற்றுவிட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,11,151 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்   42,309 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 24,890  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே  நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1054-ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று  மாலை 6 மணி முதல் இன்று காலை 10 மணி வரை இடைப்பட்ட 16 மணி நேரத்தில்  மேலும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும்,  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆயுதப்படை காவலர் உள்பட 6 பேரும்,  ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேரும்,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர் உள்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.