புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, இந்தியாவில் சுமார் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிழந்தோரில் அதிக எண்ணிக்கையிலானோர், கட்டுமானம் மற்றும் வேளாண் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், கொரோனா பரவலால் இளைஞர்களுக்கான பணி வாய்ப்பு பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள இளைஞர்களைக் காட்டிலும், 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பாதிப்பு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.