மதுரை:
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக வழக்கில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கை நேரத்தை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன், காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக 5 காவலர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மேலும் 3 காவலர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.  இதற்கிடையில், சாத்தான்குளம் சென்று அங்குள்ள உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் உள்பட, பொதுமக்கள், சக காவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஆதாரங்களை சேமித்தது.
இந்த நிலையில்,   காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று உறுதியானதால்,  உறுதியானதால் விசாரணையில் உள்ள காவலர்கள் மூவரையும் இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.