புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் உருளையான்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான சிவாவிற்கு   கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு உயர்ந்துகொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இருந்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், கொரோனா பொதுமுடக்கத்தின்போது சேவையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவர்க்கும் கொரோனா பரவி வருகிறது. அதே போல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி திமுக அமைப்பாளரும் உருளையான்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ வான சிவாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், புதுவை முதல்வர் நாராயணசாமியின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பிரபுவுக்கும் கொரோனா உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.