டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய துணை ராணுவப் படையினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள், அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21க்கு முன்னர் எந்த படைநீக்கமும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விடுப்பில் இருக்கும் வீரர்களின் விடுப்பு ஏப்ரல் 21 வரை நீட்டிக்கப்படுவதாக அனைத்து படைப்பிரிவுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

அதே போன்று இப்போது பயிற்சியில் இருக்கும் படைவீரர்களும் அதே இடங்களில் தொடர்ந்து நீடிக்குமாறும், வீரர்கள் அதிகாரிகளின் உத்தரவுகளை தொலைபேசி வழியாக பெற்று அவற்றை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ திபெத்தியன் எல்லை படை , தேசிய பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றில் பணியாற்றும் சுமார் 10 லட்சம் வீரர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.