சென்னை

கொரோனா பரவுதலில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகச் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுதல் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டத்தில் உள்ளது.   இது மூன்றாம் கட்டத்தை அடையாமல் இருக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாடெங்கும் தேசிய ஊரடங்கு நடத்தி பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இன்று ஒரே நாளில் 102 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 411 ஆகி உள்ளது.  இதனால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து தமிழக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளதாவது :

”கொரோனா பரவுதலில் தமிழகம் இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளது. இதுவரை மூச்சுத் திணறல் உள்ள 376 பேரின் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் 3 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது.

அரசு கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது.  ஒரு பகுதியில் ஒருவருக்குப் பாதிப்பு இருந்தாலும் அந்த பகுதி தீவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. வீட்டுக்கு வீடு சோதனை நடைபெறுகிறது.  சுமார் 5 லட்சம் பேர் இதில் அடங்கி உள்ளனர்” என அறிவித்துள்ளார்.