சென்னை:
கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநலக் காப்பகத்தில்  தங்கி சிகிச்சை பெற்று வரும்  நோயாளி கள் 26 பேர் மற்றும், அங்கு பணியாற்றிய மருத்துவள் மற்றும்  இயக்குநருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நோயாளிகள்  26 பேரும்  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துதிருந்தார்.
மனுவில், மனநலக் காப்பகத் தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தனிமனித இடைவெளி, கை கழுவுவது உள்ளிட்ட விஷயங்களை எடுத்துச்சொல்ல முடியாது என்பதால், அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பதற்கான அபாயம் அதிகம் உள்ளதாகவும், நோய்த்தொற்றின் அறிகுறிகள் பற்றி அவர்களால் எடுத்துக்கூற இயலாது.
எனவே கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள 20 வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 800 பேருக்கும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுருந்தார்.
இந்த மனுமீது  இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு, விசாரணை நடத்தியது. அப்போது தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  கீழ்ப்பாக்கம்  மனநலக் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்து வருவதாகவும், எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் வழக்கறிஞர்,  மனநலக் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்குச் சிறப்புக் கவனம் வழங்க வேண்டியது அவசியம் என்பதையும், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களால்தான் அவர்களை நன்றாகக் கவனிக்க முடியும் என வாதாடினார்.
இதையடுத்து,  மனுதாரர் தரப்பு விளக்கத்தை மறுப்பதற்கில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் மதிப்பது போலத்தான் அவர்களையும் நினைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு,  மனநலக் காப்பகத்தில் சிகிச்சையில் உள்ள 800 பேருக்கு மட்டுமல்லாமல், மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டன்கள், சமையல்காரர்கள் என அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
இந்த சோதனையானது  ஒரு வாரத்தில்  முடிக்க வேண்டுமெனவும், அதில் கிடைக்கும் முடிவு களைப் பொறுத்து எந்த மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதை அரசு முடிவெடுக்க வேண்டுமென  உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.