சென்னை : 

சென்னையில் 3 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரானா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில்,  அதுகுறித்த தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தரும் வகையில், களத்தில் ஏராளமான உடகங்களைச் சேர்ந்த  பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 3 பேருக்கு நேற்று கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்ற பத்திரிகையாளர்களுக்கும் அரசு சோதனை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதை ஏற்று, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

அதையடுத்து,  முதற்கட்டமாக, இன்று காலை சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 பத்திரிக்கையாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.