சென்னை:

ந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிக்கல்லூரிகளுக்கு இந்த மாதம் 31ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மார்ச் 19ம் தேதி முதல் சின்னத்திரை உட்பட அனைத்து விதமான சினிமா தொடர்பான படப்படிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் தற்போது வரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். மத்திய மாநில அரசுகள் பேரிடராக அறிவித்து, போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், வருகிற மார்ச் 19ம் தேதி முதல் சின்னத்திரை உட்பட அனைத்து விதமான படப்படிப்பும் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிம் பேசிய ஃபெப்சி தலைவர்,  “கொரோனா வைரஸ் அனைவரிடமும் பயத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. திரைப்படங்களில் காணும் காட்சி போல் கொரோனா வைரஸ் நிஜத்தில் அச்சுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் படப்படிப்பு தளத்தில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சுகாதார வசதி குறைவால், தொடர்ந்து பணி செய்தால் ஆபத்து வரும் என அச்சம் ஏற்படுகிறது.

இதனால் சின்னத்திரை உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் வரும் மார்ச் 19ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் படப்படிப்பு நடைபெறுவதால் அவர்களது கோரிக்கையை கருத்தில் கொண்டு 19ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.