சண்டிகர்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. சில மாநில மக்கள், இந்த ஊரடங்கை சரியானமுறையில் கடைபிடிக்காமல், தான்தோன்றித் தனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதை பிரதமர் மோடியும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், இன்று முழு ஊரடங்கு உத்தரவை மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் அமல்படுத்தி உள்ளார்.

நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட மக்கள் சுயஊரங்கை பஞ்சாப் மக்கள் சரியான முறையில் கடைபிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து, முதல்வர்,  மாநில தலைமைச் செயலாளர் கரண் அவ்தார் சிங் மற்றும் டிஜிபி டிங்கர் குப்தா ஆகியோருடன் நிலைமையை பரிசீலித்தார். அதைத் தொடர்ந்து, இதில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் வகையில் முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்.

இன்று பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.