வாஷிங்டன்

னைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 9.4 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் அமெரிக்காவில் மட்டும் 68.28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இங்கு இதுவரை 2.01 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

தற்போது பல உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் மும்முரமாக உள்ளன.   ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பு மருந்து கண்டறிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை  உலக அளவில் விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.  இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கொரோனா தடுப்பு மருந்து விநியோக திட்டம் வெளியாகி உள்ளது.   அந்த அறிக்கையில் கொரோனா தடுப்பு மருந்துக்குப் பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் கொரோனா தடுப்பு மருந்து தயாரானதும் எவ்வித தாமதமும் இன்றி அமெரிக்க மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு ஆரம்பக் கட்டத்தில் அதிக அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுவதால் ஆரம்பத்தில் சுகாதாரத்துறையினர், கொரோனா முன்னணி பணியாளர் ஆகியோர்க்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.